தேவனுக்கு உன்னைத் தெரியும்

என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். – சங்கீதம் 139:13

அன்பான சகோதரனே, சகோதரியே! தேவனுக்கு உன்னைத் தெரியும். இன்று அல்ல. நீ உன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக ஒப்புக்கொடுத்தபோதல்ல. நீ ஒரு பாவி என்று உணர்ந்து, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோதல்ல. இல்லை, எனக்கன்பானவர்களே. உலகத்தை உருவாக்குமுன்னே, தேவன் உங்களை அறிந்து இருந்தார். நீங்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே, உங்களை பெயர் சொல்லி அறிந்தவர் அவர். உங்கள் தாயின் கர்ப்பத்தில் உங்களைக் காப்பாற்றி, இந்நாள் மட்டும் உங்கள்மேல் நோக்கமாயிருக்கிறவர் அவர். ஏனென்றால் அவர் உங்கள் சிருஷ்டிகர், உங்கள் பரமபிதா. தம்முடைய குமாரனாகிய இயேசுவையே உங்களுக்காகக் கொடுத்தவர். ஒரு நல்ல அப்பாவைப் போல், தேவன் உங்களைக் குறித்து, சில திட்டங்களை வைத்திருக்கிறார். உங்கள் தோல்விகள் பற்றி அவருக்குத் தெரியும். உங்கள் குறைகளும் அவருக்குத் தெரியும். ஆனாலும், உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் கொடுக்கும்படியான திட்டங்கள் அவைகள்.

ஆகவே இன்று நடக்கிற சில காரியங்கள் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடாதிருங்கள், அன்பானவர்களே. தற்கொலை உங்களுக்கு ஒரு வழியே அல்ல. இன்று ஒருவேளை காதல் தோல்வியினால் உன் இருதயம் துவண்டு போயிருக்கலாம். ஆனாலும் இதுவும் கடந்து போகும். நீ எதிர்பார்த்த வேலை உனக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இது உன் முடிவு அல்ல. நீ கனவு கண்ட படிப்பு உனக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இது அல்ல உன் வாழ்க்கையின் முடிவு. ஒரு கதவு மூடும்போது, தேவன் உனக்காக வேறொரு கதவை நிச்சயம் திறப்பார்.

நீ தாயின் கர்ப்பத்தில் உருவாகும்போது, உன்னை அன்போடு நோக்கிப் பார்த்த அதே கண்களால், தேவன் இந்த வேளையும் உன்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தேவனிடத்தில் வாருங்கள். அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள். தம் அன்பினால் அவர் உனக்கு ஆறுதல் தருவார். உன்னைப் பெலப்படுத்தி, தம் திட்டங்களை உன் வாழ்க்கையில் நிறைவேற்றுவார். நம்பி வா. ஆமென்.

சங்கீதம் 139_13

13. விசுவாசம்-உணர்ச்சிகள் அல்ல

அநேக நேரங்களில் நம்முடைய பிரச்னை என்னவென்றால், நம்முடைய உணர்ச்சிகளுக்கும், விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போவது தான். ஒரு காரியத்திற்காக அழுது அழுது ஜெபம் பண்ணுகிறோம்; பண்ணின உடனே, மனம் சமாதானமாக இருக்கிறது. உடனே, அதை விசுவாசம் என்று நினைத்து திருப்தியாகி விடுவோம்.

உலகத்தில் பார்க்கிறோம். ஒரு துக்க காரியம் நடந்தால், வாய் விட்டு அழுகிறார்கள். ஏன்? அது அந்த துக்கத்தை, அந்த பாரத்தை இறக்கி வைக்க உதவுகிறது. வாய் விட்டு அழுத உடனே, ஒரு அமைதி நம்மை சூழ்ந்து கொள்ளும். அதனால் அதை விசுவாசம் என்று நினைக்க முடியுமா? அதேபோல நாம் கதறி அழுது ஜெபம் பண்ணும்போது, நமக்கு ஒரு சமாதானம் உண்டாகிறது. அது உணர்ச்சிகள் (ஃபீலிங்க்ஸ் – feelings) அடிப்படையில் ஏற்படுகிற ஒன்று. அது விசுவாசம் இல்லை.

இப்படி சொல்வது அநேகருக்கு கோபத்தை உண்டாக்கும். ஏன், அப்படி கொஞ்ச நேரம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்டு, அது விசுவாசம் என்று நினைத்தால் தவறா என்று சண்டைக்கு வருவார்கள்; வந்திருக்கிறார்கள். ஆனால், இது உங்களைக் குற்றப்படுத்தவோ, இல்லை, உங்களுக்குள் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லவோ இல்லை. இது நம்முடைய நன்மைக்காகவே. எப்படி என்று வேத வசனத்தின் மூலம் சொல்கிறேன்.

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.  அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. 
– யாக்கோபு 1:6-7

யாக்கோபு சொல்கிறார் – நாம் கேட்கும்போது விசுவாசத்தோடு கேட்கவேண்டும். சந்தேகப்படும்போது, நாம் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலை போலிருக்கிறோம். நமக்குத் தெரியும், காற்று வீசும்போது, அலைகள் மேலே போகும், உடனே கீழே வரும், மீண்டும் மேலே போகும், திரும்பவும் கீழே வரும். இது உலக நியதி. ஆனால் இப்படிப்பட்ட மனுஷன் கர்த்தரிடத்தில் இருந்து எதையாவது எப்படியாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கக் கூட கூடாது என்று யாக்கோபு சொல்கிறார்.

ஒருவேளை நாம் உணர்ச்சிகளை விசுவாசம் என்று நினைத்தால், இது தான் பிரச்னை. நம்முடைய உணர்ச்சிகள் மாறும். நாம் மனிதர்கள். எனவே, எந்த ஒரு சின்ன காரியம் கூட நம்முடைய உணர்ச்சிகளைப் பாதிக்கும். சிலருக்கு வெயில் காலத்தில் சோர்ந்து போவார்கள்; “டல்லா இருக்குது” என்று சொல்வார்கள். சிலருக்கு மழைக்காலத்தில் அப்படி இருக்கும். கொஞ்சம் சீதோஷண நிலைமை மாறினாலே, நம்முடைய உணர்ச்சிகள் மாறும். ஏன், நாம் சாப்பிடுகிற உணவு கூட நம் உணர்ச்சிகளைப் பாதிக்கும். கேட்கும் பாடல்கள் நம்மை பாதிக்கும். உற்சாகமான பாடல்களைக் கேட்கும்போது, உற்சாகமாக மேலே போகிறோம். துக்கமான பாடல்களைக் கேட்கும்போது, கீழே வந்து விடுகிறோம். கடல் அலைகள்போல மேலே போய், கீழே வருகிறோம்.

அப்பொழுது என்ன ஆகிறது? ஜெபம் பண்ணிவிட்டு உற்சாகமாய் இருக்கிறோம். உணர்ச்சிகள் அடிப்படையில் விசுவாசத்தை நினைக்கும்போது, ரொம்ப விசுவாசத்தோடு இருக்கிறதாக நினைக்கிறோம். அப்பொழுது நாம் கடல் அலை மேலே போவதுபோல போகிறோம். கொஞ்ச நேரம் கழித்தோ, மறுநாள் எழுந்திருக்கும்போதோ, “டல்லாக மனசு இருக்கிறது” என்று சொல்கிறோம். சோர்ந்து போகிறோம். இப்போது, கடல் அலைகள் கீழே விழுவதுபோல விழுந்து போகிறோம். பிறகு உற்சாகமான காரியங்கள் நடந்தால், மீண்டும் உற்சாகம். பிறகு மீண்டும் விழுகிறோம். இப்படியே மாறி, மாறி நடக்கும்போது, தேவனிடத்தில் இருந்து எதையுமே பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. அப்போது ஒரு வார்த்தை சொல்வோம்:“அன்னிக்கே எனக்கு மனசில ஒரு டவுட் (doubt) இருந்திச்சு. அதே மாதிரி ஆயிடுச்சு, பாரேன்.”

இன்றைக்குத் தீர்மானிப்போம் – நம்முடைய உணர்ச்சிகள் அடிப்படையில் அல்ல, தேவனுடைய வார்த்தையினால் உருவாக்கப்பட்ட உண்மையான விசுவாசத்தில் நாம் நிலைத்திருப்போம். ஆமென்.

யாக்கோபு 1.6_7

12. விசுவாசம்–கர்த்தர் நல்லவர்

கடந்த முறை, விசுவாசம் என்பது தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது என்று பார்த்தோம். அவர் நம்பேரில் அன்பாகவே இருக்கிறார் மாத்திரமல்ல, அவர் நல்லவராகவும் இருக்கிறார்.

அநேகர் சொல்லக் கேட்டிருக்கிறேன்: கர்த்தருக்கு என்மேல் அன்பு உண்டுதான். அவர் அன்பானவர் தான். ஆனால் எனக்கு அவர் நல்லவராக இருந்ததில்லை. ஏனென்றால் என் வாழ்க்கையில் நன்மை என்று நான் ஒன்றுமே பார்த்ததில்லை.

எப்படி கர்த்தர் அன்பானவர் என்பது அவருடைய மாறாத குணாதிசயமோ, அப்படியே அவர் நல்லவர் என்பதும் அவருடைய அடிப்படை குணங்களில் ஒன்றாயிருக்கிறது. நாம் அதை நமக்கு நடக்கிற காரியங்களை வைத்து, தீர்மானிக்க முடியாது; தீர்மானிக்கவும் கூடாது. இது நாம் ஆராய்ந்து பார்த்து, ஏற்றுக்கொள்கிற ஒரு காரியம் அல்ல. ஏனென்றால் உலகத்தில் நடக்கிற கேடான காரியங்களைப் பார்த்து, ஆராய்ந்து முடிவு செய்தால், கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்விதான் எழும்பும்.

ஆனால் கர்த்தர் நல்லவர். அதற்கு உலக வழக்கத்தின்படி ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு சினிமாவில், ஒரு நடிகனை அநேகர் அடிப்பார்கள். ஆனால் அவன் திரும்ப அடிக்கவோ, ஏன் ஒரு சத்தம் கூட கொடுக்க மாட்டான். ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்கும்போது அவன் சொல்வான்: “ஏன்னா என்னை அடிக்கும்போது, இவர் ரொம்ப நல்லவருனு சொல்லிட்டாங்க”.

என் பாவங்கள்

அப்பொழுது யோசித்துப் பாருங்கள். கல்வாரியில் இயேசு பட்ட பாடுகளைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையையோ, உலகத்தில் நடக்கிறவையோ நோக்கிப் பார்ப்பதை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் கல்வாரி பாடுகளைப் பாருங்கள். அவ்வளவு பாடுகளின் மத்தியிலும், உங்களையும் என்னையும் நேசித்தவரை நோக்கிப் பாருங்கள். நம் பாவங்களுக்காகவும், மீறுதல்களுக்காகவும் அடிபட்டு, வதைக்கப்பட்டவரைப் பாருங்கள். அதின் நடுவிலும், உங்களையும் என்னையும் பார்த்து, திருப்தி அடைந்தவரைப் பாருங்கள். கர்த்தர் நல்லவர். விசுவாசியுங்கள்.

கர்த்தர் நல்லவர்

11.விசுவாசம்-தேவனின் அன்பு… தொடர்ச்சி

நேற்று தேவன் அன்பாகவே இருக்கிறார் oswald-chambersஎன்று சொன்னேன். அதன் தொடர்ச்சியாக, ஒரே ஒரு காரியம் மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் என்கிற தேவ மனிதர் சொன்ன ஒரு காரியம்.

என் விடுதலைக்காக மட்டும் விசுவாசிக்கிறேன் என்றால் அது தேவன்மேல் உள்ள விசுவாசமல்ல. விசுவாசம் என்றால், நான் வெளிப்படையாக விடுவிக்கப்படுகிறேனோ, இல்லையோ, தேவன் அன்பாகவே இருக்கிறார் என்ற என் நம்பிக்கையில் நான் மாறுவதில்லை. சில காரியங்களை எரிகிற அக்கினி சூளையிலிருந்து மாத்திரமே கற்றுக்கொள்ள முடியும். – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்.

11.விசுவாசம்-தேவன் அன்பாகவே இருக்கிறார்

கடந்த முறை சொன்னேன், விசுவாசம் என்பது கர்த்தர் தேவன் என்று ஏற்றுக்கொள்வதில் ஆரம்பிக்கிறது. ஆனால் நாம் விசுவாசிக்கிற ஜீவனுள்ள கர்த்தர் சர்வ பூமிக்கும் ஆண்டவர் மாத்திரமல்ல, அவர் அன்பாகவே இருக்கிறார்.

1 யோவான் 4.8

நாம் விசுவாசத்தில் வளரவேண்டுமானால், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதை நாம் உணரவேண்டும். அந்த அன்பை நாம் உணர்ந்தோமானால், விசுவாசம் பெருகும்; ஏனென்றால், அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும் (1 கொரிந்தியர் 13:7) என்பது வேத சத்தியம்.

நாம் அன்பை நம்முடைய வழிகளில் உணர பார்க்கிறோம். ஒரு குழந்தை தன் தாயைக் காட்டிலும் தன் தகப்பனை நேசித்தால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். தகப்பன் அந்த பிள்ளைக்கு செல்லம் கொடுக்கிறார். ஆகவே அந்த பிள்ளை தகப்பனை அதிகம் நேசிக்கிறது. ஆனால் அநேக பிள்ளைகள் கெட்டுப் போகிறதற்கு காரணம் இப்படி செல்லம் கொடுக்கிற பெற்றோர் தான். அதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனாலும் தேவனிடத்தில் இருந்து அதே போன்ற அன்பை தான் எதிர்பார்க்கிறோம். நான் என்ன கேட்கிறேனோ, அதை அவர் உடனே தந்துவிட வேண்டும். இல்லையென்றால், அவருடைய அன்பு பொய்.

ஆனால் தேவன் அன்பாகவே இருக்கிறார். அதை நாம் நிச்சயம் உணரவேண்டும். அந்த தெளிவு இல்லாமல் நம்மால் விசுவாசத்தில் வளர முடியாது. நான் விரும்புகிற காரியங்களைக் கொடுக்கும்போதும், கர்த்தர் அன்பானவரே; அவற்றைத் தராமல் இருக்கும்போதும், அவர் அன்பானவரே. நான் விரும்பாத காரியங்களை என் வாழ்க்கையில் வராமல் தடுக்கும்போது, கர்த்தர் அன்பானவரே; அவற்றை என் வாழ்க்கையில் அனுமதிக்கும்போதும் கர்த்தர் அன்பானவரே.

அப்படி என்றால் நான் எப்படி அவருடைய அன்பில், அதனால் வரும் விசுவாசத்தில் வளர முடியும்? அதற்கு கர்த்தர் நான் கேட்ட காரியங்களுக்கு எப்படி பதில் தந்தார் என்பதில் இருந்து உணர முடியாது. நான் கேட்காமலே அவர் எனக்குத் தந்தார், பாருங்கள், ஒரு அருமையான புதையலை – அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை. அவரை, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே நோக்கிப் பார்க்கும்போது, தேவனுடைய அன்பு விளங்கும்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். – யோவான் 3:16

கல்வாரியில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நோக்கிப்பாருங்கள். அதே வேளையில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற அவலக்குரல் எழும்பினபோது, தம் சொந்த குமாரன் என்றும் பாராமல், நமக்காக, நாம் கைவிடப்படக் கூடாதபடிக்கு, நம்மேல் அன்புகூர்ந்த தேவனை நோக்கிப்பாருங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவன் உன்மேல் அன்பாகவே இருக்கிறார். விசுவாசி.

யோவான் 3-16

10. விசுவாசம்-கர்த்தர் தேவன்

கர்த்தர் தேவன். இதை உண்மையாக விசுவாசிக்க வேண்டும். இது தான் மெய்யான விசுவாசத்தின் அடிப்படை.

ஒருவேளை இது உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இதை தானே நாம் விசுவாசிக்கிறோம் – கர்த்தரே தேவன் என்று. ஆனால், “கர்த்தரே தேவன்” என்று சொல்வதற்கும் “கர்த்தர் தேவன்” என்று சொல்வதற்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.

“கர்த்தரே தேவன்” என்று நான் சொல்லும்போது, பிற தெய்வங்களை ஒப்பிட்டுச் சொல்கிறேன். ஆனால் “கர்த்தர் தேவன்” என்று நான் சொல்லும்போது, வேறு எதோடும் நான் ஒப்பிடவில்லை. என் வாழ்க்கையில் கர்த்தர் தேவனாயிருக்கிறார் என்று அறிக்கை இடுகிறேன்.

அவரே சகலவற்றையும் படைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். சகலமும் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது. வேதம் சொல்கிறது:  பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது, அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். (சங்கீதம் 24:1-2) இதை நான் விசுவாசிக்கிறேன். அப்படி என்றால், உலகமும் அதிலுள்ள குடிகளும் அவருடையது என்று சொல்லும்போது, நான் அவருடையவன், நான் அவருடையவள் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு என்மேல் சகல அதிகாரமும் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்.

சங்கீதம் 24.1-2

கர்த்தர் தேவன். நான் அப்படி சொல்லும்போது, கர்த்தருடைய அதிகாரத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை; அவருடைய ஞானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். கர்த்தர் சகலமும் அறிந்தவர்; என் எதிர்காலத்தைக் குறித்து அவர் அறிந்திருக்கிறார். அவருடைய வழி நடத்துதல்கள் எனக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவார். பாருங்கள், யோசேப்புக்கு இரண்டு கனவுகள் காட்டினார். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்தது எல்லாம், அதற்கு எதிர்மறையான காரியங்களே. முடிவோ, யோசேப்பின் கனவுகள் நிறைவேறின; ஆனால் அவர் நினைத்ததைக் காட்டிலும் மேன்மையான காரியமாக நிறைவேறின. இன்று ஒருவேளை உன் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கலாம். உன் கனவுகள் நிறைவேற இனி வழியே இல்லை என்ற நிலைமை இருக்கலாம். ஆனால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று உன்னால் நம்ப முடிகிறதா? உனக்கு அவர் தந்த தரிசனங்களை அவர் கண்டிப்பாக ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார் என்று நம்ப முடிகிறதா? அவருடைய ஞானம் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. சிற்சில வேளைகளில், நாம் எரிகிற அக்கினி சூளையின் நடுவே நடக்க வேண்டியது இருக்கும். அப்போதும், “கர்த்தர் தேவனாயிருக்கிறார்; அவர் தமக்கு சித்தமானதை என் வாழ்க்கையில் செய்கிறார்” என்று சொல்ல முடியுமா?

கர்த்தர் அறிவார்

ஒருவேளை அப்படி சொல்ல முடியாத நிலையில் நீ இருக்கலாம். கவலைப்படாதே. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்து, உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு, உனக்காக இந்த வேளையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். உன் விசுவாசத்தை அவர் பரிபூரணமாக்குவார்.

9. விசுவாசம்-கிரியைகளில்லாமல்

கிரியைகளில்லாத விசுவாசம் செத்த விசுவாசம். – யாக்கோபு 2:20

அநேக நேரங்களில் இந்த வசனம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, இல்லையென்றால் பயன்படுத்தப்படுவதே இல்லை. ஒரு சிலர் சொல்வார்கள்: நான் விசுவாசிக்கிறேன், என் விசுவாசம் உறுதியாக ஆண்டவர்மேல் இருக்கிறது என்று. ஆனால் அதை எந்த கிரியைகளிலும் அவர்களால் காட்ட முடியாது.

இன்னொரு பக்கம் சிலர், கிரியைகளை தான் விசுவாசம் என்று நினைத்துக் கொண்டு, யாராவது அதிகமாய் ஜெபம் பண்ணினால், அவர்களுக்கு விசுவாசம் அதிகம் என்றும், யாராவது வைராக்கியமாய் பேசினால், உடனே அவர்களைப்போல விசுவாசம் யாருக்கும் இல்லை என்றும் சொல்வார்கள்.

நாம் வலதுபுறம் சாயாமலும், இடதுபுறம் சாயாமலும், நேர் வழியே நடத்துகிற தேவன் நம்மை விசுவாசத்திலும் செம்மையான பாதையில் நடத்துவாராக.

என்ன கிரியைகளைப் பற்றி வேதம் சொல்கிறது? நான் என்ன விசுவாசிக்கிறேனோ, அதை கிரியைகளில் காட்ட வேண்டும். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இப்போது எல்லாம் ஆராதனைக்கு வருகிறவர்கள் மறக்காமல் எடுத்து வருகிற ஒரு காரியம் – பைபிள் மட்டுமல்ல, செல்ஃபோனும். செல்ஃபோன் இல்லாமல் தேவாலயத்துக்கு வருகிறவர்கள் ஒரு சிலரே.

அந்த செல்ஃபோன் ‘ஆஃப்’ செய்யப்பட்டிருக்காது. அது ‘ஸைலண்ட்’ –இல் இருக்கும். அந்த நேரத்தில் யாராவது ஃபோன் பண்ணினாலோ, இல்லை எஸ்எம்எஸ் அனுப்பினாலோ, தெரிய வேண்டுமே. அதே போல, அந்த செல்ஃபோன் எங்கே இருக்கும் – பைபிள்மேலே இருக்கும். முழந்தாளிட்டு தலையை குனிந்து பயபக்தியாய் இருக்கிறார்கள் என்று நினைத்தால், செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். திடீர் என்று பார்த்தால், வெளியே போவார்கள் – முக்கியமான ஃபோன் வந்திருக்குமாம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? யாராவது சொந்தக்காரர்கள் இறந்து விட்டார்கள் என்ற ஃபோனா? அப்படி எதுவும் இல்லை. ஒருவேளை பரலோகத்தில் இருந்து, கர்த்தர் இவர்களுக்கு ஃபோன் பண்ணினாரோ, அப்படியும் இல்லை.

ஆனால் பாடுவது என்னவாக இருக்கும்? “நீர் மாத்திரம் போதும்; நீரே பெரியவர், உமக்கொப்பானவர் ஒருவரும் இல்லை; ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதும், நான் குணமடைவேன்; நீர் சொன்னால் போதும், செய்வேன்.பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், நீர் மட்டும் வேண்டும்.” இதை எல்லாம் விசுவாசத்துடன் தான் பாடுவார்கள். ஆனால் அவர்கள் கிரியைகள் இந்த விசுவாசம் செத்த விசுவாசம் என்று காட்டுகிறது. உங்கள் கிரியைகள் உங்கள் விசுவாசத்தைக் குறித்து என்ன சொல்கிறது?

வேதம் இப்படி சொல்கிறது: தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. – யாக்கோபு 2:19

பிசாசுகள் கூட நடுங்குகிறது… நாம்?

யாக்கோபு 2.20

8. விசுவாசம்–எந்த மகிமை?

முன்பு விளக்கியிருந்தேன் – விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதி. ஆனால் கிறிஸ்தவ விசுவாசம் வெறும் நம்பிக்கை மாத்திரம் அல்ல. அதையும் தாண்டினது. நான் விசுவாசித்தால், அந்த விசுவாசத்தை என் கிரியைகளில் காட்ட வேண்டும். அது என்ன கிரியை? அது பற்றி, தேவ சித்தமானால், பிறகு சொல்கிறேன். இங்கு ஒரு சின்ன கோடிட்டு காட்டுகிறேன்.

யோவான் 12:42-இல் பார்க்கிறோம். அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.

அதிகாரிகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் அவர் நிமித்தம் வரக்கூடிய நிந்தனையை, சிலுவையை சுமக்க அவர்கள் ஆயத்தமாக இல்லை.

இன்று அநேகருடைய விசுவாசம் இப்படிப்பட்டது தான். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். ஆனால் அந்த விசுவாசத்தினிமித்தம் வரக்கூடிய நிந்தனையை, சிலுவையை ஏற்றுக்கொள்ள அநேகர் ஆயத்தமாக இல்லை. விசுவாசித்தால் ஜெயம் மாத்திரம் வர வேண்டும், சந்தோஷம் மாத்திரம் வர வேண்டும். நினைத்தது வாய்க்க வேண்டும். இப்படி தான் அநேகர் விசுவாசத்தைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். அதற்கு தான் அடுத்த வசனத்தில் யோவான் இப்படி சொல்கிறார்.

அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். – யோவான் 12:43

இன்று யாருடைய மகிமையை நாம் தேடுகிறோம்? மெய்யான விசுவாசம் இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளும். மெய்யான விசுவாசம் இந்த வினாடி மனுஷரால் வருகிற மகிமையைக் காட்டிலும், இப்போது நிந்தையும், துன்பமும் வந்தாலும், இந்த சிலுவை தேவனிடத்திலிருந்து மகிமையைக் கொண்டுவரும் என்றும் அறிந்து, அந்த உபத்திரவங்களில் மேன்மை பாராட்டும்.

யோசித்துப் பார்ப்போம். துன்பங்களும், எதிர்பாராத தோல்விகளும், நிந்தனைகளும் வரும்போது, அதை நாம் எப்படி மேற்கொண்டோம்? நான் விசுவாசித்தேனே, எனக்கு ஏன் இப்படி நேரிட்டது என்று சோர்ந்துபோனோமோ? இன்று கர்த்தரிடத்தில் வருவோம். விசுவாசத்தைக் குறித்து நமக்குப் போதித்து, அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ நம்மை நடத்த அவர் ஆயத்தமாய் இருக்கிறார்.

ரோமர் 5.4

7. விசுவாசம்–எது தவறு

நேற்று ஏன் நம் விசுவாசம் எப்போதும் இயேசுவையே நோக்கிக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். அப்போது பிற காரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதைப் பற்றி எழுதியிருந்தேன்.

இன்று கிறிஸ்தவ உலகில் அநேக உபதேசங்களும், கொள்கைகளும் உண்டு. பிசாசின் கிரியைகளைப் பற்றியும், தந்திரங்களைப் பற்றியும் அநேக புத்தகங்கள் உண்டு. இதெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமா? அவசியம் தானா? இதில் எப்படி ஒரு உபதேசம் துர் உபதேசம் என்றும், ஒரு கொள்கை தவறானது என்றும், எப்படி சொல்லப்படுகிற ஒரு காரியம் என் விசுவாசத்தைச் சேதப்படுத்தாது என்றும் என்னால் தெரிந்துக்கொள்ள முடியும்?

அதற்கு ஒரே வழி என் விசுவாசம் இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரை மாத்திரம் அறிந்ததாய் இருக்க வேண்டும். எனக்கு இயேசுவை நன்றாகத்  தெரிந்தால், ஒரு காரியம் தவறா, சரியா என்று தெரிந்து கொள்ள முடியும். ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஆவிக்குரிய காரியங்களில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினபோது, வேத தியானம் செய்ய ஆசையாய் இருந்தது. ஆகவே அருகில் இருந்த ஒரு நூலகத்திற்கு சென்றேன். அங்கே வேத தியானத்தைக் குறித்திருந்த புத்தகங்களைப் பார்த்தபோது, திகைத்துப்போனேன். அவ்வளவு புத்தகங்கள். அப்படியே அவைகளைப் பார்த்துக்கொண்டே வந்தபோது, அடுத்த பிரிவிலும், அதேப்போல அநேக புத்தகங்கள் இருந்தன, அங்கே கூட்டமும் அதிகமாக இருந்தது.

என்ன பிரிவு என்று பார்த்தால், அது சாத்தானைக் குறித்தும், பிசாசின் கிரியைகளைக் குறித்தும், பேய்களைக் பற்றியதுமான பிரிவு. எழுதினவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் தான். கிறிஸ்தவர்கள் இந்த காரியங்களைக் குறித்து அறிந்து கொள்ளவேண்டும் என்று எழுதப்பட்டிருந்த புத்தகங்கள். சில புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒன்றிரண்டு புத்தகங்களில் எழுதப்பட்டிருந்த காரியங்கள் என் வாழ்க்கையில் நான் அனுபவித்தவை. ஆனால் மீதி புத்தகங்கள் விநோதமான காரியங்களையும், அருவருப்பான காரியங்களையும் பற்றி விலாவாரியாக எழுதப்பட்டிருந்தது. குழம்பிப்போனவனாக அங்கிருந்து புறப்பட்டுப்போனேன்.

அப்போது எனக்கு பிராண்டன் (Brandon) என்கிற ஒரு அருமையான கிறிஸ்தவ நண்பன் இருந்தார். அவரிடம் இதைப் பற்றி சொன்னபோது, அவர் எனக்கு மிக அருமையான உதாரணம் ஒன்று சொன்னார்.

பாங்க்-கில் இப்போது எல்லாம் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்க எத்தனையோ உபகரணங்கள் வந்து விட்டன. ஆனால் ஒரு காலத்தில், இந்த உபகரணங்கள் வரும்முன், எப்படி கண்டுபிடித்தனர்? அந்த கேஷியருக்கு நல்ல பயிற்சி கொடுப்பார்கள். எது கள்ள நோட்டு என்ற பயிற்சி அல்ல. அதற்குப் பதிலாக, ஒரு நல்ல நோட்டைக் கொடுத்து, அதைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி செய்வார்கள்.

1000-Rupee-Note-Of-India-2000

அப்போது யாராவது ஒரு 1000 ரூபாய் நோட்டைக் கொடுத்தால், அந்த கேஷியர் அது கள்ள நோட்டா என்று ஆராய்வதில்லை; அது நல்ல நோட்டா என்று பார்ப்பார்கள். அது நல்ல நோட்டு இல்லையென்றால், அது கள்ள நோட்டு என்றுத் தெரிந்துவிடும். இது மிகவும் எளிது. ஏனென்றால் ஒவ்வொரு கள்ள நோட்டுக்கும் வித்தியாசம் இருக்கும். ஆனால், நல்ல நோட்டுகளில் மாற்றம் கிடையாது. மாற்றம் இருந்தால், அது நல்ல நோட்டு இல்லை.

அதேப்போல தான் கிறிஸ்தவ விசுவாசத்திலும். என் கிறிஸ்தவ விசுவாசத்தில், மாறாத இயேசுவை நான் நன்றாக அறிந்திருந்தால், மாறான ஒரு காரியம் வரும்போது, எனக்குத் தெரியும், இது தவறு என்று. ஆகவே நான் தவறான உபதேசங்கள் எது, சாத்தானின் கிரியைகள் எது என்று அறிந்துக்கொள்ள வேண்டியதில்லை. கிறிஸ்துவை அறிந்திருந்தால் போதும். ஆகவே தான் பவுல் சொல்கிறார்.

இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். – 1 கொரிந்தியர் 2:2.

நாமும் இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே அறிந்துக்கொள்வோம். விசுவாசத்தில் வளருவோம். அப்போது, விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே என்று எளிதாக அறிந்துக்கொள்வோம்.

1 கொரிந்.2.2

6. விசுவாசம்–இயேசுவை நோக்கி

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி… – எபிரேயர் 12:1

கடந்த முறை கிறிஸ்தவ விசுவாசம் இயேசுவில் தொடங்கவேண்டும் என்று எழுதி இருந்தேன். ஆனால் தொடங்கினால் மட்டும் போதாது. தொடர்ந்து இயேசுவை நோக்கிக் கொண்டே இருக்கவேண்டும். இயேசு கிறிஸ்து ஆதி அந்தமற்றவர். தொடக்கமும் முடிவும் இல்லாதவர். தேவனுடைய வார்த்தை என்பது அவருடைய நாமங்களில் ஒன்று. சகல சம்பூரணத்திற்கும் எல்லை உண்டு, ஆனால் தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லை என்பதே கிடையாது. ஆகவே நம் விசுவாசமும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இன்று அநேக கிறிஸ்தவர்கள் விசுவாச ஓட்டத்தை ஆரம்பித்த உடனே, கர்த்தராகிய இயேசுவின் மேல் இருந்து தங்கள் கண்களை எடுத்துவிட்டு, பிற ஆவிக்குரிய காரியங்களிலும், உபதேசங்களிலும், தங்களுக்கு அப்பாற்பட்ட காரியங்களிலும் ஈடுபட தொடங்குகிறார்கள்.

சமீபத்தில் ஒரு சகோதரர் என்னிடத்தில் வந்து “வாட்ஸ்-அப்”பில் அவருக்கு வந்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, என்னிடத்தில் கேட்டார்: “சாத்தான் சபையின் உட்புறம் இப்படி தான் இருக்குமா?” நான் அவரை ஒரு மாதிரியாக  பார்த்து  கேட்டேன், “ஏன் என்னைப் பார்த்தால் சாத்தான் சபைக்குப் போய் வந்ததுபோல இருக்கிறதா?” அவர் சொன்னார்  “இல்லை, உங்களுக்குத் தெரிந்து இருக்குமோ என்று கேட்டேன்.” என்னுடைய பதில் இதுதான் “இயேசு கிறிஸ்துவை பற்றி தெரிந்து கொள்ளவே எனக்கு என் வாழ்நாளெல்லாம் போதாது. இதில் சாத்தான் சபையைப் பற்றி நான் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்?”

அப்போஸ்தலனாகிய பவுல் இதை மிக அழகாக சொல்கிறார். இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். – 1 கொரிந்தியர் 2:2

ஒருவேளை நீங்கள் கேட்கலாம். அப்பொழுது பிற காரியங்கள், அதுவும் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றியும், சாத்தானின் கிரியைகளையும் பற்றி அறிந்து கொள்வது தவறா? அதை எல்லாம் எப்படி தெரிந்து கொள்வது? நியாயமான கேள்வி. அதற்கு தேவ சித்தமானால் நாளை பதில் சொல்கிறேன்.

இன்று இதை மாத்திரம் நாம் தீர்மானிக்கலாம். நம் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கியே ஓடுவோம். இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானிப்போம். விசுவாசத்தில் வளருவோம். தேவனுக்குப் பிரியமானவர்களாய் வாழ்வோம். ஆமென்.

இயேசு